இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தம்பதி உயிரிழப்பு
ராமநாதபுரம்
பரமக்குடி அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் தம்பதியினர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள கீழ பார்த்திபனூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(75). இவரது மனைவி பஷ்பம். தம்பதியினர் இருவரும் நெடும்புளி கிராமத்தில் உள்ள தனது மகளை பார்த்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பியுள்ளனர்.
மதுரை – ராமநாதபுரம் நான்கு வழிசாலையில் சூடியூர் விலக்கு அருகே ராமகிருஷ்ணன் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக அதிவேகமாக வந்த கார் ஒன்று இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த தம்பதியினர் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பிவைத்த பார்த்திபனூர் போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.