×

திருப்பூர் அருகே இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை - கோட்டாட்சியர் விசாரணை!

 

திருப்பூர் மாவட்டம் பொங்கலூரில் திருமணமான சில மாதங்களில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அம்மன் நகரை சேர்ந்தவர் பாண்டி (25). கூலி தொழிலாளி. இவருக்கு, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரஞ்சிதா (21) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில், ரஞ்சிதாவின் நடத்தை மீது சந்தேகப்பட்ட பாண்டி, அவரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கணவன் - மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை  ஏற்பட்டு வந்துள்ளது. இதில் ரஞ்சிதா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த ரஞ்சிதா, வீட்டில் தனியாக இருந்தபோது  தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தகவல் அறிந்த அவிநாசி பாளையம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த ரஞ்சிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமான சில மாதங்களில் ரஞ்சிதா உயிரிழந்ததால் இந்த சம்பவம் குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.