×

ஈரோடு அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி!

 

ஈரோட்டில் மளிகைக்கடையின் ஷட்டரை திறக்க முயன்றபோது மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி சரண்யா (28). இத்தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். குமார் குடும்பத்துடன் ஈரோடு பூந்துறை சாலையில் உள்ள வாய்க்கால்மேடு பகுதியில் தங்கி, மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் குமார் துறையூருக்கு சென்ற நிலையில், சரண்யா கடையை கவனித்து வந்துள்ளார்.

நேற்றிரவு வழக்கம்போல் வியாபாரம் முடித்து கடையின் இரும்பு ஷட்டரை பூட்டிவிட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்றிரவு ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால், சரண்யாவின் கடையில் மின்கசிவு ஏற்பட்டு இரும்பு ஷட்டரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த நிலையில், இன்று அதிகாலை வியாபாரம் துவங்குவதற்காக சரண்யா கடை ஷட்டரை திறக்க முயன்றுள்ளார். அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், மின்இணைப்பை துண்டித்து ஈரோடு தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சரண்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்