×

பெரம்பலூர் அருகே இளம்பெண் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை!

 

பெரம்பலூர் அருகே டாஸ்மாக் கடை ஊழியரின் மனைவி தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேலூரை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் மேலமாத்தூர் டாஸ்மாக் கடையில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி யுவராணி. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். யுவராணி, இருசக்கர வாகன விற்பனையகத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே, அவருக்கு கடந்த சில வருடங்களாக வயிற்று வலி இருந்து வந்துள்ளது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தும் அவருக்கு நோய் குணமடையவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர் மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று காலை கணவர் கடைக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் இருந்த யுவராணிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவதியுற்ற அவர் விரக்தியில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். யுவராணி மயங்கிய நிலையில் கிடப்பதை கண்ட ஸ்ரீதர் உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் யுவராணி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து யுவராணியின் தந்தை செல்லையா அளித்த புகாரின் பேரில், பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.