×

கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதல் - தந்தை, மகன் பலி!

 

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் அருகே கண்டெய்னர் லாரி மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஊத்துபள்ளம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (28). இவர் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் வேலை செய்து வந்தார். இவருக்கு ரோகிணி என்ற மனைவியும், மிதுன் (2) என்ற மகனும் உள்ளனர். நேற்று பெரியசாமி, மனைவி, மகனுடன் இருசக்கர வாகனத்தில் காவேரிப்பட்டினத்துக்கு சென்று கொண்டிருந்தார்.

பையூர் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரியின் பின்புறம் அதிவேகமாக மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த, குழந்தை மிதுன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். மேலும், படுகாயமடைந்த பெரியசாமி, ரோகிணி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு காவேரிப்பட்டணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பெரியசாமி பரிதாபமாக உயிரிழந்தார். ரோகிணிக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து காவேரிபட்டணம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.