×

கோவையில் ரயில் என்ஜின் மோதி கல்லூரி மாணவர் உள்பட இருவர் பலி!

 

கோவை கவுண்டம்பாளையத்தில் ரயில் என்ஜின் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர் உள்ளிட்ட 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(17). அதே பகுதியை சேர்ந்தவர்கள் தனியார் கல்லூரி மாணவர்கள் விஜயகிருஷ்ணன்(18), ஸ்ரீகாந்த். நண்பர்களான மூவரும் நேற்றிரவு 7.30 மணியளவில் கவுண்டம்பாளையம் அருகே உள்ள ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, மூவரும் செல்போன் பார்த்தவாறு நடந்து சென்றதாக தெரிகிறது.

அப்போது, மேட்டுப்பாளையத்தில்  இருந்து கோவைக்கு சென்ற  ரயில் எஞ்சின் எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் நடந்து சென்ற மணிகண்டன் மற்றும் விஜயகிருஷ்ணன் மீது மோதியது. இதில் உடல் சிதறி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சின் வருதை கவனித்த ஸ்ரீகாந்த் தண்டவாளத்தில் இருந்து இறங்கியதால் உயிர் தப்பினார். விபத்து குறித்து தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற உயிரிழந்த மணிகண்டன், விஜயகிருஷ்ணன் ஆகியோரது உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரயில் எஞ்சின் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 இளைஞர்கள் பலியான சம்பவம் கவுண்டம்பாளையம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.