வெற்றி கொண்டாட்டத்தை போலீசிடம் கூறியவர் மீது தாக்குதல்… திமுக நிர்வாகி உள்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு!
திருச்சி
திருச்சி அருகே தேர்தல் வெற்றி கொண்டாட்டத்தை போலீசுக்கு தெரிவித்த அதிமுக பிரமுகரை தாக்கிய, திமுக நிர்வாகி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
திருச்சி மாவட்டம் இனாம்குளத்தூரையடுத்த பெரியஆலம்பட்டி புதூரை சேர்ந்தவர் பச்சமுத்து. இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது வீட்டின் அருகே திமுக நிர்வாகியான சார்லஸ் என்பவர், திமுக வெற்றி பெற்றதை தனது நண்பர்களுடன் பட்டாசு வெடித்து கொண்டாடி உள்ளார்.
தகவலறிந்த இனாம்குளத்தூர் போலீசார், கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சார்லஸ் உள்ளிட்டோரை எச்சரித்து அனுப்பி உள்ளனர்.இதனால், ஆத்திரமடைந்த சார்லஸ் தனது நண்பர்களுடன், பச்சமுத்துவின் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது, வாக்குவாதம் முற்றியதால், பச்சமுத்துவை சார்லஸ் தரப்பினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, இதுகுறித்து பச்சமுத்து சார்பில் அளித்த புகாரின் பேரில், இனாம்குளத்தூர் போலீசார் திமுக நிர்வாகி சார்லஸ் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.