மலேசிய கடலில் தவறி விழுந்த மகனை மீட்டுத் தர வலியுறுத்தி தாய் கண்ணீருடன் மனு
திருச்சி மண்ணச்சநல்லூர் எதுமலை பகுதியை சேர்ந்தவர் கலா. இவரது மகன் கோபு (25).மரைன் இன்ஜினியரிங் முடித்துவிட்டு மலேசியாவில் கப்பலில் கடந்த ஆறு வருடங்களாக பணியாற்றி வருகிறார். நேற்று காலை தனது தாய்க்கு அழைப்பு விடுத்து கோபு பேசியுள்ளார். அதன்பிறகு அவர் பேசவில்லை.
இந்நிலையில் நேற்று இரவு கோபுவின் நண்பர், கலாவை தொடர்பு கொண்டு, கோபு கால் தவறி கடலில் விழுந்ததாகவும், அவர் இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
கோபு கால் தவறி விழுந்தது உண்மைதானா என்பது தெரியவில்லை என்றும், தன்னுடைய மகன் உயிருடன் இருக்கிறானா இல்லையா? என்பது தெரியாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதாகவும் மகனின் நிலை குறித்து தகவல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தாய் கலா இன்று திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க புகார் அளித்தார்.