திருவள்ளூர்- மதுபோதையில் ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது
திருவள்ளூர்
ஆவடி அருகே மதுபோதையில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம்மை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை போலீசார் கைதுசெய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பழைய திருவள்ளூர் சாலையில்
ரயில்வேகேட் அருகே இந்தியன் வங்கி ஏ.டி.எம் மையம் உள்ளது.
இந்நிலையில், கடந்த 12ஆம் தேதி காலை ஏடிஎம் மையத்தில் இருந்த இரு இயந்திரங்கள் உடைக்கப்பட்டு திறந்துகிடப்பதாக போலீசாருக்கு புகார் வந்தது.
இதையடுத்து நேரில் ஆய்வுசெய்த ஆவடி போலீசார், வங்கி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் ஏடிஎம்மில் இருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தனர்.
அப்போது, கேமராவில் இருந்து அலாரத்துக்கு செல்லும் வயர் துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. மேலும், இரவில் மர்மநபர் ஒருவர் உள்ளே புகுந்து ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க முயன்றதும், பொதுமக்கள் நடமாட்டம் இருந்ததால் பின்னர் அங்கிருந்து தப்பிச்சென்றதும் தெரியவந்தது. இதனால் இரு ஏடிஎம்களிலும் இருந்த 11 லட்ச ரூபாய் ரொக்கம் தப்பியது தெரியவந்தது. சம்பவம் நடந்த இடம் குறித்து ஆவடி போலீசாரும், ரயில்வே போலீசாரும் மாறுபட்ட தகவல்களை தெரிவித்து புகார் பெற மறுத்த நிலையில், இறுதியாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். போலீசாரின் விசாரணையில், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது
சென்னை பல்லவன் சாலை சிவசக்தி நகரை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (34) என்பது தெரியவந்தது. ஆவடி ரயில் நிலையத்தில் மது அருந்திவிட்டு போதையில் தூங்குவதை வழக்கமாக கொண்ட ஹரிகிருஷ்ணன், திடீரென கத்தியை எடுத்து ஏடிஎம்மில் புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து, ஹரிகிருஷ்ணனை கைதுசெய்து ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.