×

திருமணம் செய்வதாக கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர்... போலீசார் தீவிர விசாரணை!

 

ஈரோட்டில் திருமணம் செய்வதாக  ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவியை கர்ப்பமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுத்த இளைஞரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரோடு அடுத்த லக்காபுரத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண், ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு பி.ஏ. வரலாறு படித்து வந்தார். இந்த நிலையில், கல்லூரி மாணவிக்கு வாட்ஸ்-அப் மூலம் அர்த்தநாரீஸ்வரன் (25) என்ற வாலிபர் பழக்கமானார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இதன் மூலம் கல்லூரி மாணவியை அவர் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் நெருங்கிப் பழகி உள்ளார். 

மேலும், மாணவியை கட்டாயப்படுத்தி அர்த்தநாரீஸ்வரன் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் மாணவியை திருமணம் செய்யாமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில், மாணவி 4 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து அர்த்தநாரீஸ்வரனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர்  மாணவிக்கு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன் பேரில், போலீசார் அர்த்தநாரீஸ்வரன் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து, அவரிடம் விசாரணை நடத்தினார். போலீசார் விசாரணையில் அர்த்தநாரீஸ்வரன் மாணவி கர்ப்பத்திற்கு தான் காரணம் இல்லை என்று கூறினார்.  இதனால் போலீசார் குழப்பம் அடைந்தனர்.  இதனை அடுத்து டி.என்.ஏ. பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது