×

சேலம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் சிறுவன் பலி

 

சேலம் அருகே கனமழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள அல்லிகுட்டை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமசாமி - நந்தினி தம்பதியினர். இவர்களது மகன் பாலசபரி(4). நேற்று தம்பதியினர் இருவரும் மகன் பாலசபரி மற்றும் பேத்தி புவனேஷ்வரி ஆகியோருடன் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர். இந்த நிலையில், சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்த  தொடர் மழையின் காரணமாக ராமசாமியின் மண்ணால் ஆன வீட்டுச் சுவர் மழையில் நினைத்து ஈரப்பதத்துடன் இருந்துள்ளது.  இன்று காலை எதிர்பாராத விதமாக வீட்டில் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது சுவர் இடிந்து விழுந்தது. 

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி சிறுவன் பாலசபரி பலத்த காயமடைந்தான். ராமசாமி, அவரது பேத்தி புவனேஷ்ரி,  ஏழுமலை, காளியம்மாள் ஆகிய 4 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. சுவர் இடிந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச்சென்று 5 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் பாலசபரியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். பின்னர், ராமசாமி, புவனேஷ்வரி உள்ளிட்டோர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். 

தகவல் அறிந்த வீராணம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து நடைபெற்ற பகுதியை சேலம் ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.