கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி சிறுவன் பலி!
தென்காசி
சங்கரன்கோவிலில் கிணற்றில் குளித்தபோது நீரில் மூழ்கி 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகரை சேர்ந்தவர் கண்ணதாசன். இவரது மகன் கார்த்திக் (12). தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், கார்த்திக் நேற்று நண்பர்களுடன் சேர்ந்து அங்குள்ள கிணற்றுக்கு குளிக்க சென்றுள்ளார். ஆழமான கிணறு என்பதால், அதன் படிக்கட்டில் அமர்ந்தவாறு குளித்துள்ளார்.
அப்போது, எதிர்பாராத விதமாக தவறி கிணற்றில் விழுந்த கார்த்திக் நீரில் மூழ்கி மாயமாகினார். இதனை கண்டு, அவரது நண்பர்கள் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் கிணற்றில் குறித்து சிறுவனை தேடிப் பார்த்தனர். ஆனால், அவனை மீட்க முடியவில்லை. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றி சிறுவனை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
சுமார் 2 மணி நேர போராட்டத்துக்கு பின் சிறுவன் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சங்கரன்கோயில் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.