×

திருமணமான பெண்களுக்கு சமூக வலைதளத்தில் பாலியல் தொல்லை - எலக்ட்ரீசியன் கைது

 

கன்னியாகுமரி அருகே திருமணமான பெண்களுக்கு சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள காஞ்சாம்புரம் மாங்குழி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (25). எலக்ட்சியன். இவர் பேஸ்புக் சமூக வலைதளத்தில் போலியான பெயரில் கணக்கு துவங்கி திருமணமான பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும், மெசெஞ்சரில் ஆபாச வீடியோ மற்றும் புகைப்படங்களை அனுப்பி ஆசைக்கு இணங்காவிட்டால் ஆபாச படங்களை வெளியிடுவதாக மிரட்டி உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட திருமணமான பெண் உள்பட 2 பெண்கள் குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணனிடம் புகார் அளித்தனர்.

அதன் பேரில், புகார்களின் மீது விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பேரில், போலீசார் விசாரணை மேற்கொண்டதில் சுரேஷ், பெண்களுக்கு பேஸ்புக் மற்றும் வாட்ஸ் அப்பில் ஆபாச புகைப்படங்களை அனுப்பி பாலியல் தொல்லை அளித்து வந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி சுரேஷை கைது செய்தனர். தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில்  ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.