×

காரிமங்கலம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே சரக்கு வாகனத்தில் கடத்திச்சென்ற 2 டன் ரேஷன் அரிசியை, வட்ட வழங்கல் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தருமபுரி மாவட்டத்தில் இருந்து கிருஷ்ணகிரி, பெங்களூர் பகுதிகளுக்கு, அதிகளவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக, மாவட்ட ஆட்சியர் திவ்யதர்சினிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஜெயக்குமார் தலைமையில், வட்ட வழங்கல் அலுவலர்கள் ஆறுமுகம், குப்புசாமி ஆகியோர் கொண்ட குழுவினர், சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில், காரிமங்கலம் அருகே  தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி வந்த சரக்கு வாகனத்தை, சந்தேகத்தின் பேரில் அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அதிகாரிகளை கண்ட ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடினார். இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், வாகனத்தில் இருந்த மூட்டைகளை பிரித்து சோதனையிட்டனர். அப்போது, அதில் ரேஷன் அரிசி கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் 48 மூட்டைகளில் இருந்த 2 டன் ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தை அவர்கள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, பறிமுதலான ரேஷன்அரிசியை நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். மேலும், சரக்கு  வாகனம் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வு துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அத்துடன், ரேஷன் அரிசி கடத்தி வந்தவர்கள் குறித்து, குடிமைப்பொருள் குற்றப் புலனாய்வு துறையினர் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய ஓட்டுநரை தீவிரமாக தேடி வருகின்றனர்.