×

தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.4 லட்சம் மோசடி - ஒருவர் கைது!

 

தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக ஆன்லைனில் போலியாக விளம்பரம் செய்து பலரிடம் ரூ.4 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்ட நபரை குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

ஆன்லைன் மூலம் தனியார் நிறுவனங்களில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்து, பண மோசடியில் ஈடுபட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கன்னியாகுமரி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இதுகுறித்து குமரி மாவட்ட எஸ்.பி. பத்ரிநாராயணன் உத்தரவின் பேரில், சைபர் கிரைம் ஆய்வாளர் வசந்தி தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தார்.

அப்போது, நாடைக்காவு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர், தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக போலியாக விளம்பரம் செய்து கன்னியாகுமரி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு நபர்களிடம், ஏமாற்றி ரூ.4 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனையடுத்து, சுரேஷை  கைதுசெய்த சைபர் கிரைம் போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், அவரது வங்கி கணக்கையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.