மனைவி தலையில் கல்லை போட்டு கொலை; கணவர் தப்பியோட்டம்
ராமநாதபுரம்
கமுதி அருகே குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லைபோட்டு கொலை செய்த கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள வங்காருபுரத்தை சேர்ந்தவர் தனுக்கோடி (60). இவரது மனைவி மாரியம்மாள்(50). தனுஷ்கோடி அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று தம்பதியினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த தனுஷ்கோடி, மாரியம்மாளின் தலை மீது கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடினார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அபிராமம் போலீசார், மாரியம்மாளின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவுசெய்து, தப்பியோடிய தனுஷ்கோடியை தேடி வருகின்றனர்.