புதுக்கோட்டை: சொகுசு காரில் கடத்த முயன்ற 27 லட்சம் கஞ்சா பறிமுதல்
காரில் கஞ்சா கடத்தியவரை புதுக்கோட்டை அருகே போலீசார் வளைத்துப் பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
புதுக்கோட்டை பகுதியில் சொகுசு காரில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது . இதனை அடுத்து திருக்கோகர்ணம் வெல்லனூர் கீரனூர் ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .
அப்போது புதுக்கோட்டையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரை சிப்காட் பகுதியில் மறித்து சோதனை செய்தபோது, காரில் சென்ற நபர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தபோது அதில் 88 பண்டல்கள் அடங்கிய 200 கிலோ கஞ்சா கடத்தப்படுவது தெரிய வந்தது .
இதனை அடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூபாய் 27 லட்சம் . மேலும் அதனை கடத்தி வந்த ஆரோக்கியதாஸ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.
ஆரோக்கியதாஸ் புதுக்கோட்டை அரிமளம் பகுதியை சேர்ந்தவர் என்றும், இவர் கோழிக்கோடு, கோயம்புத்தூர் ஆர். எஸ். புரம், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அடிதடி மற்றும் மது கடத்தல் போன்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்றும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
காரில் ஆரோக்கியதாசுடன் வந்த ரமேஷ் தப்பி ஓடிவிட்டார். அவரையும் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர் .