ஆலங்குடி அருகே பிறந்து சில நாட்களே ஆன குழந்தை சடலம் மீட்பு!
புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் குழந்தையின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த கரும்பிரான் கோட்டை பெரியகுளம் ஓடையில் புதைக்கப்பட்டு இருந்த மர்ம பொருளை நாய்கள் இழுத்து கொண்டிருந்தன. இதனால், கடும் துர்நாற்றம் வீசியதை அடுத்து, அந்த பகுதியில் பொதுமக்கள் சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன சிசு ஒன்று குழிக்குள் சரிவர புதைக்கப்படாமல் இருந்தது தெரிய வந்தது.
இதனை அடுத்து, பொதுமக்கள் ஆலங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் ராமையா அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த ஆலங்குடி போலீசார், அந்த குழந்தை யாருடடையது என்றும், அதனை புதைத்து சென்ற நபர்கள் குறித்தும் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.