×

தருமபுரியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்... பொதுமக்களிடம் இருந்து 554 மனுக்கள் பெறப்பட்டது!

 

தருமபுரி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 554 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று ஆட்சியர் திவ்யதர்ஷினி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனுக்களை வழங்கினர்.

இதன்படி, பொதுமக்கள் கல்வி உதவித்தொகை, இலவச தையல் இயந்திரம், பசுமை வீடு, பட்டா மறும் சிட்டா பெயர் மாற்றம், பேருந்து சேவை, குடிநீர் சேவை உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் கோரியும், வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா, புதிய மின் இணைப்பு வசதி, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகைகள், 3 சக்கர சைக்கிள் உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வேண்டியும் 554 மனுக்களை ஆட்சியரிடம் வழங்கினர்.

இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி, அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி, மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்கள் அளிக்கின்ற கோரிக்கை மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான மனுக்களுக்கு உரிய தீர்வினை உடனுக்குடன் வழங்கிட வேண்டுமென அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தனித்துணை ஆட்சியர்(சமூக பாதுகாப்பு திட்டம்) சாந்தி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சீனிவாசசேகர், உதவி ஆணையர்(கலால்) தணிகாச்சலம் உள்ளிட்ட தொடர்புடைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.