×

மகள் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை... தூத்துக்குடி அருகே சோகம்!

 

தூத்துக்குடி அருகே மகள் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூர் அருகே உள்ள சிப்பிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் கார்மேகசாமி. தொழிலாளி. இவரது மனைவி பொன்னுதாய் (47). இவர்களது மகள் முத்துமாரி (23). இவர் சிப்பிகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை காதலித்து வந்தார். இதனை அறிந்த இளைஞரின் பெற்றோர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் முத்துமாரி மனமுடைந்து காணப்பட்டு வந்தார். இந்த நிலையில், கடந்த 20ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மகள் இறந்ததால் பொன்னுதாய் மனவேதனையில் இருந்து வந்தார். அவருக்கு குடும்பத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த பொன்னுதாயி நேற்று முன்தினம் வீட்டில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தகவலின் பேரில் குளத்தூர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மகள் இறந்த வேதனையில் தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.