கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், வேதனையில் மனைவி தற்கொலை!
கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி அருகே கணவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வேதனையில் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டம் திப்பம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. விவசாயி. இவருக்கு சிந்தாமணி( 40) என்ற மனைவியும், 2 மகள்கள் உள்பட 3 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், மூர்த்திக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சளி, காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து, அவருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதனால், மூர்த்தி தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே, கணவருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டதால் சிந்தாமணி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் தனியாக இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.