×

சென்னிமலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்!
 

 

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் சிறப்பு உறுப்பினர் சேர்க்கை முகாமை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்து, உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கும் சிறப்பு  முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமை தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த விழாவில் பேசிய அமைச்சர் சாமிநாதன், தமிழகத்தில் 18 வகையான தொழிலாளர்கள் நல வாரியங்கள் சிறப்பாக செயல்பட்டு வருவதாகவும், ஈரோடு மாவட்டத்தில் மட்டும் இதுவரை 90 ஆயிரத்து 240 பேர் உறுப்பினராக சேர்ந்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

ஈரோடு மாவட்டத்தில் பதிவு செய்யாத தொழிலாளர்கள் அனைவரும், இந்த சிறப்பு முகாமில் சேர்ந்து பயன் பெறுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும், சிறப்பு முகாமில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் உறுப்பினர்கள் சுமார் 50 பேருக்கு புதிய பதிவு அட்டை, கல்வி உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட நலத் திட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருஷ்ண்ணுண்ணி, ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி, மாவட்ட  ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் எஸ்.ஆர்.எஸ். செல்வம், சென்னிமலை ஊராட்சி ஒன்றிய தலைவர காயத்திரி இளங்கோ, சமூக பாதுகாப்புத் திட்டம் தொழிலாளர் உதவி ஆணையர் சு.காயத்ரி  உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.