×

புதுக்கோட்டை சிறையில் விசாரணை கைதி நெஞ்சுவலியால் மரணம்!

 

புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மகன் மகேந்திரன்(30). இவர் கடந்த 2014ஆம் ஆண்டு நாச்சியார்கோவில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். பின்னர் பிணையில் வெளியே வந்த மகேந்திரன், நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்துள்ளார். இதனை அடுத்து, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்த நிலையில், கடந்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி மகேந்திரன் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இதனை தொடர்ந்து, புதுக்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவருக்கு, நேற்று காலை நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, சிறைக்காவலர்கள்  அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டை டவுன் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.