×

2 மகள்களை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு, தந்தை தற்கொலை... திருப்பூர் அருகே சோகம்!

 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு தந்தையும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகில் உள்ள முத்தூர் துத்திக்குளம் பகுதியை சேர்ந்தவர் ஜெகன். இவருக்கு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள காசிப்பாளையத்தை சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு தேஜஸ்வி(4), சுவஸ்வி(2) என்ற 2 மகள்கள் உள்ளனர். ஜெகன் தனது மாமனார் வீட்டில் தங்கியிருந்து ஆடு வியாபாரம் செய்து  வந்தார். இந்த நிலையில், ஜெகனுக்கு தொழில் நஷ்டம் காரணமாக மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். மேலும், மனைவியுடன் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், நேற்று மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட அவர், குழந்தைகள் தேஜஸ்வி, சுவஸ்வி ஆகியோரை அழைத்துக் கொண்டு துத்திக்குளத்தில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் வீட்டில் இருந்து வெளியே சென்ற மூன்று பேரும் மாயமாகினர். இதனால், சந்தேகமடைந்த குடும்பத்தினர் அவர்களை பல்வேறு இடங்களில் தேடினர். அப்போது, வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் ஜெகன்ன மற்றும் அவரது மகள்கள் தேஜஸ்வி, சுவஸ்வி ஆகியோர் சடலமாக மிதப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த உறவினர்கள் இதுகுறித்து வெள்ளக்கோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். 

அதன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து ஜெகன் குடும்ப தகராறில் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 2 மகள்களை கிணற்றில் தள்ளி கொன்றுவிட்டு ஆட்டு வியாபாரி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.