×

அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி; போலி நியமன ஆணை வழங்கும் வாலிபர்!

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. அந்த பள்ளியின் தலைமையாசியையிடம் கடந்த 1ம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி ஆணையை கொடுத்துள்ளார். அந்த பணி ஆணையில் அரசு துறைகளில் வழங்குவதை போலவே ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல்
 

ஈரோடு கொல்லம்பாளையத்தில் ரயில்வே காலனி அரசு மேல்நிலைபள்ளி உள்ளது. அந்த பள்ளியின் தலைமையாசியையிடம் கடந்த 1ம் தேதி ஈரோடு மாநகராட்சி பகுதியை சேர்ந்த 29 வயது ஆண், அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கு தன்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி நியமித்துள்ளதாக கூறி, பணி ஆணையை கொடுத்துள்ளார்.

அந்த பணி ஆணையில் அரசு துறைகளில் வழங்குவதை போலவே ஊதிய குழு பரிந்துரையின் படி ஊதிய விவரம், முகவரி, முதன்மை கல்வி அலுவலர் கையெழுத்து, கண்காணிப்பாளர் கையெழுத்து, சீல் போன்றவை இருந்தது. ஆனால், முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்து மட்டும் மாற்றம் இருந்ததால், உஷாரான தலைமையாசிரியை உடனடியாக ஈரோடு முதன்மை கல்வி அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, பணி ஆணை குறித்து விவரம் கூறினார். ஆனால், அதிகாரிகள் அதுபோன்ற பணி ஆணை இந்த ஆண்டில் யாருக்கும் வழங்கவில்லை என கூறியதால், தலைமையாசிரியை அதிர்ச்சி அடைந்து, அவரை முதன்மை கல்வி அலுவலரிடம் ஒப்படைத்தார்.

இதைத்தொடா்ந்து, பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அந்த பணி ஆணையை வாங்கி ஆய்வு செய்தபோது, அது போலியான பணி நியமன ஆணை என்பது உறுதி செய்தனர். இதைத்தொடர்ந்து, அந்த நபரிடம் நடத்திய விசாரணையில், ஈரோட்டை சேர்ந்த ஒரு மர்மநபர், ரயில்வே காலனி அரசு பள்ளியில் அலுவலக உதவியாளர் பணி காலியாக உள்ளதாகவும், அதற்கு ரூ.7லட்சம் பணம் கொடுத்தால் பணி ஆணை வழங்குவதாக கூறியதாகவும், அதற்கு முன்பணமாக ரூ.3லட்சம் கொடுக்க வேண்டும் என்றும், மீதமுள்ள பணத்தை வேலை கிடைத்ததும் வழங்கினால் போதும் என கூறியதாகவும், இதனால், அந்த நபர் அவரது பெற்றோர் மூலம் அந்த மர்மநபருக்கு ரூ.3லட்சம் பணம் கொடுத்ததாக கூறியுள்ளார். இதன்பேரில், அந்த மர்ம ஆசாமி, அவராகவே பணி ஆணை தயாரித்து, முதன்மை கல்வி அலுவலரின் கையெழுத்திட்டு வழங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி, ஈரோடு எஸ்பி., தங்கதுரையிடம் புகார் அளித்தார். இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின்பேரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் போலி நியமன ஆணையை அச்சிட்டு வழங்கிய அவல்பூந்துறை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் ( வயது 36) என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மேற்கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.