கடன் தொல்லையால் தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை
ஈரோட்டில் கடன் தொல்லை காரணமாக தொழிலதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு முனிசிபல் காலனி, சேக்கிழார் வீதியை சேர்ந்தவர் சரவணன் (42). ஈரோடு, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஜவுளிக்கடை நடத்தி வரும் சரவணன், இதற்காக பலரிடம் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனாவால் ஜவுளி வியாபாரம் பாதிக்கப்பட்டதால், கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்த முடியாமல் மன வேதனையில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த சரவணன் திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு சரவணனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று சரவணன் உயிரிழந்தார்.
இதுகுறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.