சிறப்பு ரயில்களில் தினமும் 3 ஆயிரம் பேர் பயணம்:மேலும் சிறப்பு ரயில்கள் இயக்க வாய்ப்பு
கொரோனாவினால் ரத்து செய்யப்பட்ட சிறப்பு ரயில்களை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியை அடுத்து ஈரோடு ரயில்நிலையம் வழியாக கோவை -சென்னை சேரன் எக்ஸ்பிரஸ், மேட்டுப்பாளையம்- சென்னை நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை -சென்னை இன்டர்சிட்டி, கோவை -சென்னை கோவை எக்ஸ்பிரஸ்,கோவை -மயிலாடுதுறை ஜன்சதாப்தி உள்ளிட்ட சிறப்பு ரயில்கள் கடந்த 7ம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
கடந்த 7ஆம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு ரயில்களில் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது. கொரோனா அச்சம் காரணமாகவும் ஆர்வமின்மை காரணமாக குறைந்த அளவு பயணிகள் பயணம் செய்தனர். ஆனால், கடந்த ஒரு வாரமாக சிறப்பு ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய ஈரோடு ரயில்வே அதிகாரிகள், ’’கடந்த 7ஆம் தேதி முதல் ஈரோடு மார்க்கமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. முதல் ஒரு வாரம் குறைந்த அளவே பயணிகள் பயணம் மேற்கொண்டனர். ஆனால் தற்போது நாளொன்றுக்கு 3000 பேர் வரை சிறப்பு ரயில்களில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறப்பு ரயில்களில் 80 சதவீதம் அளவு பயணிகள் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இன்னும் நாட்கள் செல்லச் செல்ல பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கத் தான் செய்யும்’’என்றனர்.
மேலும், ‘’தற்போது படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருவதால் மேலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட வாய்ப்புள்ளது’’ என்கிறார்கள்.