×

கரூர் அருகே காவிரி ஆற்றில் குதித்து முதியவர் தற்கொலை!

 

கரூர் அருகே காவிரி ஆற்றில் குதித்து தேனியை சேர்ந்த முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்தவர் வேலுசாமி (71). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டம் நெரூரில் உள்ள சதாசிவம் - பிரமேந்திராள் கோவிலுக்கு வந்துள்ளார். பின்னர், அருகில் உள்ள காவிரி ஆற்றுக்கு சென்ற வேலுசாமி, திடீரென ஆற்றில் குதித்தார்.  ஆற்றில் அதிகளவு தண்ணீர் சென்று கொண்டிருந்த நிலையில், அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் வாங்கல் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். 

அதன் பேரில் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வேலுசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில்  வேலுசாமி, இதய நோய் பாதிப்பால் அவதி பட்டு வந்ததும், இதனால் மனமுடைந்த அவர் காவிரி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.