×

திருச்சி அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து முதிய தம்பதி பலி!

 

திருச்சி அருகே கழிவறையில் வழுக்கி விழுந்து முன்னாள் ராணுவ வீரர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (75). ஓய்வுபெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி அன்னபூரணி(65). இவர்களுக்கு ராஜேந்திரன், ராமச்சந்திரன் என 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று மாரியப்பன் தனது வீட்டில் உள்ள கழிவறைக்கு சென்றிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக கால் வழுக்கி கீழே விழுந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த, அருகில் நின்றிருந்த அன்னப்பூரணி ஓடிச்சென்று மாரியப்பனை காப்பாற்ற முயன்றார். 

ஆனால் திடீரென அவரும் வழுக்கி விழுந்தார். இதில், கணவன் - மனைவி இருவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் விரைந்து சென்று இருவரையும் மீட்டு, லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். கழிவறையில் விழுக்கி விழுந்து தம்பதி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.