வனப்பகுதியில் கேட்பாரற்று கிடந்த 4 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்
திண்டுக்கல்
திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே வனப்பகுதியில் மர்மநபர்கள் வீசிச் சென்ற 4 கள்ள நாட்டுத்துப்பாக்கிகளை போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனர். சிறுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெருமளவில் நாட்டு துப்பாக்கிகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி., ரவளிபிரியா உரிய அனுமதியின்றி கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கிகள் வைத்திருப்பவர்கள் உடனடியாக அவற்றை போலீசாரிடம் ஒப்படைக்கவும், மீறி
பதுக்கிவைத்திருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து இருந்தார். இந்நிலையில் சிறுமலையில் உள்ள தென்மலை வனப்பகுதியில் மர்மநபர்கள் சிலர் 4 கள்ள நாட்டு துப்பாக்கிகளை வீசிச் சென்றுள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் தாலுகா காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். இதனை தொடர்ந்து, ஆய்வாளர் தெய்வம், வனச்சரகர் மனோஜ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கேட்பாரற்று கிடந்த 4 கள்ள நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 துப்பாக்கி குழல்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக வழக்கு பதிவுசெய்து துப்பாக்கிகளை வீசிச்சென்ற மர்மநபர்கள் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.