இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் பெண் பலி
கோவை
கோவை அருகே இருசக்கர வாகனம் மீது ஈச்சர் லாரி மோதிய விபத்தில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் கோவில்பாளையம் கொங்குநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிமுத்து. தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி அழகம்மாள். தம்பதியினர் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் கோயிலுக்கு சென்றனர். சத்தியமங்கலம் சாலையில் குரும்பப்பாளையம் அருகே சென்றபோது இருசக்கர வாகனம் மீது எதிரே வந்த ஈச்சர் லாரி மோதி விபத்திற்கு உள்ளானது.
இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு இருவரையும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த நிலையில் நேற்றிரவு அழகம்மாள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மாரிமுத்துவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கோவில்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரை கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.