×

அறுவை சிகிச்சையின்போது சிறுமி பலி; தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் போராட்டம்

கோவை கோவை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மூன்றரை வயது சிறுமி உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன்(30). இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும், ஹரிணி(6) மற்றும் பிரியதர்ஷினி (31/2) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை வீட்டில் படியில் ஏறும்போது சிறுமி பிரியதர்ஷினி தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கை முட்டியில் காயம்
 

கோவை

கோவை தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது மூன்றரை வயது சிறுமி உயிரிழந்ததால், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி ராமகிருஷ்ணன்(30). இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும், ஹரிணி(6) மற்றும் பிரியதர்ஷினி (31/2) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை வீட்டில் படியில் ஏறும்போது சிறுமி பிரியதர்ஷினி தடுமாறிக் கீழே விழுந்துள்ளார். இதில் அவரது இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டதால், அவரை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், அவரது கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி கோவைக்கு செல்ல அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் ராமகிருஷ்ணன், கோவை சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் என்ற தனியார் மருத்துவமனையில் சிறுமியை அனுமதித்து உள்ளார். அங்கு, நேற்று முன்தினம் மாலை பிரியதர்ஷினிக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற போது, அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது உறவினர்கள், தவறான சிகிச்சையால் குழந்தை உயிரிழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், ராமகிருஷ்ணனிடம் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.