“அதிக பயணிகளை ஏற்ற வேண்டும்” – வாக்குவாதம் செய்த போக்குவரத்து அதிகாரி
கொரோனா தொற்று அச்சம் காரணமாக , பல கட்டுப்பாடுகள், நிபந்தனைகளுடன் போக்குவரத்து சேவை தொடங்கப்பட்டுள்ளது. மக்கள் வேறு வழி இல்லாமல் ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
அரசு விதித்த கட்டுப்பாடுகளில், பயணிகளை ஏற்றும்போது ஒவ்வொரு இருக்கைக்கும், ஒரு இருக்கை இடைவெளிவிட வேண்டும் என நிபந்தனை விதித்துள்ளது. ஆனால், நடைமுறையில் அவ்வாறு இல்லை என புலம்புகின்றனர் ஓட்டுநர்களும், நடத்துநர்களும்.
வெளியூர் பேருந்துகளுக்கு ஆன்லைன் புக்கிங் மூலம் டிக்கெட்டுகள் எடுத்தாலும், காலியாகும் இருக்கைகளில் பயணிகளை ஏற்ற வேண்டும் என்பது வாய்மொழி உத்தரவாம். சென்னை கோயம்பேட்டில் இது தொடர்பாக போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஓட்டுநர்களும், நடத்துநர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
40 பயணிகளை ஏற்றி வந்தால் தான், பேருந்தை இயக்க ’டைம்’ போட்டு தருவேன் என்று போக்குவரத்து அதிகாரி கூறுகிறார். அதற்கு ஓட்டுநர்களும், நடத்துநர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.
இதுதொடர்பாக வீடியோக்கள் வெளியாகி, போக்குவரத்து துறை வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த அரசு முயன்றாலும், பரவல் அதிகரித்தால் எனக்கென்ன என்பதுபோல போக்குவரத்து துறை செயல்பாடு உள்ளதாக மக்கள் புலம்புகின்றனர். அரசின் கவனத்துக்கு சென்றால் சரி.