இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்தவர் மீது தீப்பற்றியதால் பரபரப்பு
சென்னை
சென்னை குன்றத்தூர் அருகே இருசக்கர வாகனத்தில் அமர்ந்து புகைப்பிடித்த மீன் வியாபாரி மீது திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குன்றத்தூர் அடுத்த சோமங்கலம் புதுநல்லூர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(54). இவர் இருசக்கர வாகனத்தில் மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில்,குன்றத்தூர் மோகலிங்கம் நகரில் கேனில் பெட்ரோல் வாங்கிய மூர்த்தி, அதனை இருசக்கர வாகனத்தின் முன் பகுதியில் வைத்துவிட்டு, சிகரெட்டை பற்றவைத்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பொறி விழுந்ததில், பெட்ரோல் கேன் வெடித்து சிதறியது. இதில், மூர்த்தியின் உடல் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனைகண்டு அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர் மீது எரிந்துகொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.