×

திருவள்ளூர் அருகே கார் - லாரி நேருக்கு நேர் மோதி விபத்து... புதுமண தம்பதி பலி!

 

திருவள்ளூர் அருகே நேற்றிரவு காரும், லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் புதுமண தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார்(31). இவர் மருந்து விநியோகஸ்தராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும், சென்னை பெருங்களத்தூரை சேர்ந்த மருத்துவர் கார்த்திகா (30) என்பவருடன்ன கடந்த மாதம் 28ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. கார்த்திகாவின் வீட்டில் இருந்த புதுமண தம்பதியினர் இருவரும் நேற்று இரவு அரக்கோணத்திற்கு காரில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தனர். 

திருவள்ளூர் மாவட்டம் கூவம் அருகே பூந்தமல்லி - அரக்கோணம் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது மனோஜ்குமார் கார் மீது எதிரே வந்த சிமெண்ட் டேங்கர் லாரி மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கி மனோஜ்குமார், அவரது மனைவி கார்த்திகா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

தகவல் அறிந்து விபத்து பகுதிக்கு சென்ற மப்பேடு போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து மப்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணமான 4 நாட்களில் புதுமண தம்பதி விபத்தில் பலியான சம்பவம் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.