×

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து; பெண் மருத்துவர் உள்பட இருவர் பலி!

 

கள்ளக்குறிச்சி அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் கோவையை சேர்ந்த பெண் மருத்துவர் உள்பட இருவர் உயிரிழந்தனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியை சேர்ந்தவர் உமாராணி (80). தோல் மருத்துவர். இவர் நேற்று திருப்பூரில் வசித்து வரும் மகளான பல் மருத்துவர் கற்பகம் மற்றும் பேத்தி கவிமலர் ஆகியோருடன் காரில் சென்னைக்கு சென்று கொண்டிருந்தார். காரை கற்பகம் ஓட்டினார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெரியாமாம்பட்டு என்ற இடத்தின் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக சாலையில் நடந்து சென்ற தனியார் பள்ளி காவலாளி சக்கரை என்பவர் மீது கார் மோதியது.

பின்னர், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் சக்கரை மற்றும் மருத்துவர் உமாராணி ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர். கற்பகம், அவரது கவிமலருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதனை அடுத்து, கிராம மக்கள் காயமடைந்தவகளை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சக்கரை, உமாராணி ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். மற்ற இருவருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்த தியாகதுர்கம் போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


.