×

கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தரகாறில் பொறியாளர் குத்திக்கொலை... 6 பேர் கும்பல் வெறிச்செயல்!

 

ஓசூர் அருகே கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்பட்ட தகராறில் கட்டிட பொறியால் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சொப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மோகன்பாபு. இவர் கட்டிட பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், கடந்த வாரம் மோகன்பாபு, அதே பகுதியை சேர்ந்த இளைஞர்களுடன் சேர்ந்து கிரிக்கெட் போட்டி விளையாடி உள்ளார். அப்போது, மோகன்பாபு தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து, அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில், நேற்று புத்தாண்டை ஒட்டி மோகன்பாபு, தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தி கொண்டிருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த பவன் மூர்த்தி உள்ளிட்ட 6 பேர் கும்பல், மதுபோதையில் இருந்த மோகன்பாபுவை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் பலத்த காயமடைந்த மோகன்பாபு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தகவல் அறிந்த மத்திகிரி போலீசார், மோகன்பாபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் மத்திகிரி போலீசார், 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.