×

ஆம்பூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், பணம் கொள்ளை!

 

ஆம்பூர் அருகே முன்னாள் வங்கி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகேயுள்ள அய்யனூர் பகுதியை சேர்ந்தவர் சௌந்தரராஜன். முன்னாள் வங்கி ஊழியர். இவர் கடந்த வாரம் குடும்பத்துடன், நீலகிரி மாவட்டத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, அவரது வீட்டின் பூட்டு  உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சௌந்தரராஜன், உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது, மர்மநபர்கள் பீரோவை உடைத்து, உள்ளே வைத்திருந்த கால் கிலோ வெள்ளி நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரிய வந்தது.

இது குறித்து அவர் ஆம்பூர் கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்னர். மேலும் தடயவியல்  நிபுணர்களை வரவழைத்து, கொள்ளையர்களின் கைரேகை பதிவுகள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, இந்த கொள்ளை சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.