×

திருமணமான 10 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை

 

ஓசூரில் திருமணமான 10 மாதத்தில் கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து சார் ஆட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஓம்சாந்தி நகரை சேர்ந்தவர் முகமது ஷபி. இவரது மகள் ஹர்சியா(22). இவருக்கு, ஓசூர் ரோஸ் கார்டன் பகுதியை சேர்ந்த சலீம் என்பவருடன் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஹர்சியா தற்போது 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இதனிடையே, சலீமுக்கு இதய நோய் பாதிப்பு இருந்து வந்துள்ளது. இதுகுறித்து ஹர்சியாவுக்கு தெரியவந்ததால், கணவன் - மனைவி இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது

இதனால், கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஹர்சியா கோபித்துக்கொண்டு தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். கணவருடன் உடனான தகராறால் மனமுடைந்து காணப்பட்ட ஹர்சியா, நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், ஹர்சியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து ஹர்சியாவின் தந்தை முகமது ஷபி அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமான 10 மாதத்தில் ஹர்சியா தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்பவம் குறித்து ஓசூர் சார் ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.