×

வேலூரில் ராட்சத பாறை உருண்டு விழுந்து தாய், மகள் பலி!
 

 

வேலூர் காகிதப்பட்டறை மலைப்பகுதியில் மழையினால் ராட்சத பாறை உருண்டு விழுந்ததில் தாய், மகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வேலூர் மாநகர் பகுதியில் கடந்த ஒரு வார காலமாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நேற்று மதியம் 2 மணி முதல் வேலூர் நகரில் பலத்த மழை பெய்தது. இதனை தொடர்ந்து,  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள காகிதப்பட்டறை மலையின் மீதிருந்த ராட்சத பாறை ஒன்று நேற்று மாலை 4 மணி அளவில் திடீரென உருண்டு, அடிவாரத்தில் உள்ள வீட்டின் மீது விழுந்தது

இதில் அந்த வீட்டில் இருந்த ரமணி (45) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பாறையின் அடியில் அவரது மகள் நிஷாந்தி(25) என்பவர் சிக்கி கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாறையின் அடியில் சிக்கிய பெண்ணை மீட்க முயன்றனர். மேலும், வேலூர் ஆட்சியர் குமரவேல் பாண்டியன் மற்றும் எஸ்.பி செல்வகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்பு பணிகளை பார்வையிட்டனர். 


இதனை தொடர்ந்து நீண்ட நேர போராட்டத்துக்கு பின் அவர்கள் நிஷாந்தியை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர். இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதியில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. பாறை உருண்டு விழுந்து தாய், மகள் பலியான சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.