×

ஒட்டன்சத்திரம் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் பலி... திருவிழாவுக்கு மைக்செட் அமைத்தபோது சோகம்!

 

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கோவில் திருவிழாவுக்கு மின்அலங்கார விளக்குகள் அமைத்தபோது மின்சாரம் தாக்கியதில் இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள சாமியார்புதுர் கிராமத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கிருஷ்ணகுமார்(18). இவர் நேற்று ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நாகனாம்பட்டி பகுதியில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு மை செட்டுகள் மற்றும் மின் அலங்கார விளக்குகள் கட்டும் பணியில் நேற்று ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக அருகே சென்ற உயர் அழுத்த மின்கம்பியின் மீது உரசியதால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதில் துக்கிவீசப்பட்டதில் பலத்த காயமடைந்த கிருஷ்ணகுமாரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அடுத்து, ஒட்டன்சத்திரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.