×

காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... மணப்பாறை அருகே சோகம்!

 

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள புத்தாநத்தம் பகுதியை பொன்னுசாமி. இவரது மகள் நந்தினி (27). இவர் துவரங்குறிச்சி பகுதியை சேர்ந்த சின்ராசு என்பவரை கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு ஒரு மகன் உள்ளான். கணவன் - மனைவி இருவரும், வையம்பட்டியில் உள்ள தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தனர். இந்த நிலையில், இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இதனால் நந்தினி கணவரை பிரிந்து, புத்தாநத்தம் பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில், குடும்ப தகராறு காரணமாக வாழ்க்கையில் விரக்தியடைந்த நந்தினி, நேற்று வீட்டில் இருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நந்தினியின் தாய் ஆண்டியம்மாள் அளித்த புகாரின் பேரில் புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.