×

திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை... குடும்ப தகராறில் சோகம்!

 

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஆலத்துடையான்பட்டி சின்ன கல்லாங்குத்து பகுதியை சேர்ந்தவர் சரத்குமார். இவர் திருச்சியில் உள்ள உணவகத்தில் தொழிலாளி ஆக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கலையரசி (24) என்பவருடன் திருமணம் நடைபெற்றது. சரத்குமார், திருச்சியில் தங்கி பணிபுரிவதால் வாரம் ஒரு முறை வீட்டிற்கு சென்று வந்துள்ளார்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த கலையரசி, கோவில் திருவிழாக்களுக்கு செல்வதாக கூறி அடிக்கடி வெளியே சென்று வந்துள்ளார். இதனை அறிந்த சரத்குமார், கலையரசிக்கு போன் செய்து கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த கலையரசி, நேற்று வீட்டில் இருந்த பூச்சிமருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர்  மேல் சிகிச்சைக்காக திருச்சியில்  உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி கலையரசி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமான ஒன்றரை ஆண்டுகளில் கலையரசி தற்கொலை செய்து கொண்டதால் இந்த சம்வம் குறித்து முசிறி வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டுள்ளார்.