×

கந்தர்வக்கோட்டையில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை... மேற்படிப்பில் சேர முடியாததால் சோகம்!

 

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் பெற்றோர் கல்லூரியில் சேர்க்க மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை மண்டேலா நகரை சேர்ந்தவர் முருகானந்தனம். இவரது மகள் ஷாலினி(18). இவர் 12ஆம் வகுப்பு படித்துவிட்டு, அங்குள்ள கடை ஒன்றில் பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில், ஷாலினி கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும் என விரும்பி உள்ளார். இதுகுறித்துபெற்றோரிடம் கேட்டு வந்த நிலையில், அவர்கள் தற்போது பண வசதி இல்லாததால் பின்னர் சேர்ப்பதாக கூறியுள்ளனர். எனினும் கல்லூரியில் சேர முடியாததால் ஷாலினி மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார்.இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். 

இதில் பலத்த தீக்காயம் அடைந்த ஷாலினியை குடும்பத்தினர் மீட்டு, தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஷாலினி, நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் கந்தர்வக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்றோர் மேற்படிப்பு சேர்க்க மறுத்ததால் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.