×

ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பலி... வாணியம்பாடி அருகே சோகம்!

 

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் உமா(34). இவர் ரயில்களில் செல்போன் ஹெட்செட் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில், நேற்று சென்னையில் இருந்து  திருவனந்தபுரம் சென்ற விரைவு ரயில் ஏறி ஹெட்செட் வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். வியாபாரம் முடிந்து ரயில் படிக்கட்டு அருகே நின்றபடி வந்துள்ளார். நேற்றிரவு கேத்தாண்டப்பட்டி - வாணியம்பாடி இடையே ரயில் சென்று கொண்டிருந்தபோது திடீரென கால் தவறி ஓடும் ரயில் இருந்து கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று உமாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி  அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.