×

கோவில் முன்பு சடலமாக கிடந்த தொழிலாளி... கொலையா? என போலீசார் விசாரணை!

 

சிவகங்கை அருகே தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். கூலி தொழிலாளி. இவரது மனைவி வசந்தி(42). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இதனிடையே, திருணமனமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு காரணமாக, சுரேஷ் மனைவியை பிரிந்து தஞ்சாவூரில் வசித்து வந்தார். இந்த நிலையில், பல ஆண்டுகளுக்கு பிறகு நேற்று முன்தினம் இரவு சுரேஷ் மீண்டும் மனைவியை பார்ப்பதற்காக பெரும்பச்சேரிக்கு வந்துள்ளார்.

ஆனால், மதுபோதையில் இருந்த சுரேஷை, வசந்தி வீட்டிற்குள் அனுமதிக்காத நிலையில், அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இந்த நிலையில், நேற்று காலை அந்த பகுதியில் உள்ள முருகன் கோவிலின் அருகே, சுரேஷ் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தார். இதனால் அதிர்ச்சியிடைந்த வசந்தி, இதுகுறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் மதுபோதையில் உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரிந்து சென்ற மனைவியை பார்ப்பதற்காக வந்த தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.