சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் தொழிலாளி பலி!
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே ஜல்லிக்கட்டு போட்டியில் காளைமுட்டியதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள நெருஞ்சிலகுடி கிராமத்தை சேர்ந்தவர் சூசை (58). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 4 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று சமயபுரம் அடுத்த மேட்டு இருங்களூர் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்காக சூசை சென்றிருந்தார்.
அப்போது, போட்டியில் பங்கற்ற காளை ஒன்று எதிர்பாராத விதமாக சூசையின் வயிற்றில் குத்தியது. இதில் பலத்த காயமடைந்த சூசையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று சூசை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சமயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.