×

வேலூர் அருகே எருதுவிடும் விழாவில் காளை முட்டியதில் தொழிலாளி பலி!

 

வேலூர் மாவட்டம் லத்தேரி அருகே எருது விடும் விழாவின்போது காளை முட்டியதில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள பட்டுவான்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் கந்தன்(19). தொழிலாளி. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று வேலூர் மாவட்டம் லத்தேரி அடுத்த கீழ் முட்டுக்கூரில் பொங்கல் பண்டிகையை ஒட்டி நடைபெற்ற எருதுவிடும் விழாவை பார்க்க சென்றிருந்தார். போட்டியை பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக காளை ஒன்று கந்தனை முட்டியது. இதில் கழுத்து பகுதியில் பலத்த காயமடைந்தார்.

இதனை அடுத்து, அவரை மருத்துவக்குழுவினர் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு சிகிச்சை பலனின்றி கந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வெங்கடேசன் அளித்த புகாரின் பேரில் லத்தேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.