×

கணவர் பிரிந்து சென்றதால் பெண் தீக்குளித்து தற்கொலை... குமரி அருகே சோகம்!

 

குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே கணவர் பிரிந்து சென்றதால் விரக்தியில் பெண் தீக் குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே உள்ள வடக்கூர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி லட்சுமி (50). கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரமேஷ் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் லட்சுமி தனியே வசித்து வந்தார். மேலும், கணவர் பிரிந்து சென்றதால் அவர் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு கால் தவறி கீழே விழுந்ததில் லட்சுமியின் காலில் முறிவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்த நிலையில், வாழ்க்கையில் விரக்தியடைந்த லட்சுமி நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது உடலில் மண்ணெண்ணையை ஊற்றிக் கொண்டு தீக்குளித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் பலத்த தீக்காயம் அடைந்த லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த ஆரல்வாய்மொழி போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்வம் குறித்து புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.