×

தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பலி... தஞ்சை அருகே சோகம்!

 

தஞ்சை அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்து, திருமானூர் பகுதியை சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

அரியலூர் மாவட்டம் திருமானூர் பகுதியை சேர்ந்தவர் கருணாகரன். இவரது மனைவி கஸ்தூரி(45). இவர் நேற்று தஞ்சை மாவட்டம் சூரக்கோட்டை பகுதியில் உள்ள உறவினரின் துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். தொடர்ந்து, அவர் திருமானூர் செல்வதற்காக தஞ்சையில் தனியார் பேருந்தில் ஏறி உள்ளார். பேருந்தில் கூட்டம் சற்று அதிகமாக இருந்ததால் படியின் அருகே அவர் நின்றவாறு பயணம் செய்தார். சிறிது தொலைவில் பேருந்து வளைவில் திரும்பியபோது எதிர்பாராத விதமாக படியில் நின்றிருந்த கஸ்தூரி தவறி கீழே விழுந்தார்.

இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் கஸ்தூரி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவலின் பேரில் தஞ்சை தாலுகா காவல் நிலைய போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.